Home » Cricket, Headline, Tamil-தமிழ்

கிடைக்காத நூறு

18 August 2010 2,008 views 4 Comments

நூறு என்பது கிரிக்கெட்டில் ஒரு முக்கிய லட்சியம். ஐம்பது கூட கிரிக்கெட்டில் அரை சதமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அரை சதத்துக்கும் சத்தம் போட்டு குதூகலிக்கும் ரசிகர்களே இதற்கு சாட்சி.

எங்களுக்கெல்லாம் லார்ட்ஸைவிட அதிக நேசமாக நினைவில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இருபத்தைந்து ரன்களுக்கும் கை தட்டல் ஒலிக்கும்; விசில் பறக்கும். அதற்கு காரணம், மேட்ச் காண வரும் ரசிகர் கூட்டத்தில் கணிசமாக உட்கார்ந்திருக்கும் சென்னை லீக் கிரிக்கெட், ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் வீரர்கள். இருபத்தைந்து என்பது ஹிந்து பேப்பரில் பெயர் பதியக்கூடிய எண்ணிக்கை. (என் பெயரும் ஒரு முறை வந்து அன்று ஹிந்து பேப்பர் எனக்கே கிடைக்காமல் விற்றுப் போனது தனிக்கதை; அது இன்னும் ட்ராஃப்ட் ப்ளாக்கில் முடிக்கப்படாமல் இருக்கிறது).

எல்லா நாடுகளிலும் எப்படி என்று தெரியாது. ஆனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், ஒரு வீரரின் அரை சதம், சதம் ஆகியவற்றுக்கு மட்டும் என்றில்லாமல், அணியின் ஸ்கோர் தாண்டும் ஒவ்வொரு அரை சதத்துக்கும் கை தட்டி ஆரவாரம் செய்து வீரர்களுக்கு உற்சாகம் தருவார்கள். இது பேட்ஸ்மன்களுக்கு மட்டுமே. பவுலர்கள் விக்கெட் ஒன்றும் அதிகம் சாய்க்காமல் நூறு கொடுத்தால் ஊளையிட்டு அவர்களை வெறுப்பேற்றவும் செய்வார்கள். ஆக, எந்த சதத்திற்கும் சத்தமாக ஒரு எதிர்வினை உண்டு.

சதங்களை எடுத்து சாதனை புரிவது என்பது சிலருக்கு மட்டுமே பேட் வந்த கலை. சேத்தன் சவுஹான் (இப்போது பாரளுமன்ற உறுப்பினர்) ஒரு காலத்தில் காவஸ்கருடன், காவஸ்கர் மனைவி மார்ஷனிலை விட அதிகம் நேரம் செலவழித்தவர். காவஸ்கரின் குறிப்பிட்டு சொல்லத்தக்க துவக்கப் பங்காளி (ஓபனிங் பார்ட்னர்). அந்த நாட்களில் டெஸ்ட் மேட்ச் தொடர்களுக்கு இடையில் நீண்ட இடைவெளி இருந்ததால் நாற்பது போட்டிகள் மட்டுமே விளையாடியவர்.

கவாஸ்கருக்கு முன்னரே இந்திய அணியில் இடம் பிடித்த சவுஹான் நாற்பது போட்டிகளில் அறுபத்தியெட்டு முறை களம் இறங்கியிருக்கிறார். பதினாறு முறை அரை சதத்தை எட்டியிருக்கிறார்.

முப்பத்து நான்கு முறை சதம் அடித்து சாதனை புரிந்த காவஸ்கரின் பார்ட்னராக பல முறை களம் இறங்கியிருந்தாலும் சவுஹான் ஒரு முறை கூட முழு சதம் அடித்ததில்லை.

அதிக பட்ச இலக்கம் 97.

இன்னும் மூன்று முறை கிட்டத்தட்ட நூறு அடித்திருக்கிறார்; தொண்ணூறை எட்டாமல் 84, 85, 88 என்று வெளியேறியிருக்கிறார். நடுவில் சொன்ன 85 இந்தியாவுக்கு மிகவும் பெருமை கொடுத்த வெற்றியை வாங்கித் தந்த மேட்சில். அந்த டெஸ்ட் போட்டியில், அப்போது இந்திய கிரிக்கேட்டின் சுப்ரீம் ஸ்டாரான கபில் தேவ், அடிபட்ட காலுக்கு மரக்கும் ஊசி போட்டுக்கொண்டு செய்த பந்து வீச்சு மறக்க முடியாதது.

சவுஹானின் பல அரை சதங்கள் இந்தியாவின் மானத்தை கப்பலில் ஏறாமல் காப்பாற்ற உதவிய அரை சதங்கள். காவஸ்கர் பூச்சியத்தில் வெளியேறினாலும் ராச்சியத்தை காப்பாற்ற போராடி பெற்ற அரைசதங்கள் சவுஹானின் சரித்திரத்தில் உண்டு.

இருந்தாலும்…

இருபத்தைந்து போட்டிகளுக்கு மேல் ஆடிய துவக்க ஆட்டக்காரர்களில் சென்சுரியே அடிக்காத சாதனை சவுஹானுக்கு இருக்கிறது. அது அவருக்கு மனதளவில் ஒரு குறையாகவே என்றும் இருக்கும்.

சவுஹான் போல சிலருக்கு சென்சுரி கனவாக மட்டுமே இருந்தாலும், கிரிக்கெட் கடவுள் ப்ராட்மேன், காவஸ்கர், ப்ராட்மனுக்கே கடவுள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சாதனை படைத்து வரும் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு சதம் அடிப்பது என்பது தினசரி காலை குடிக்கும் காஃபி போல சாதாரணம்.

இந்த வரிசையில் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இடம் பிடித்துக் கொள்பவர்களில் முதன்மையானவர் வீரேந்தர் சேவாக்.

இப்போதுதான் நடந்து முடிந்த இலங்கை – இந்தியா ஒருநாள் போட்டியில் தொண்ணுற்று ஒன்பதில் இருந்த சேவாக்கை நூற விடாமல் நொந்து நூலாக்கி நோ பாலிட்ட இலங்கையின் அழுகுணி ஆட்டம் இப்போது ரசிகர்களிடையே சூடான டாபிக்.

இது இலங்கை பந்து வீச்சாளர் ரந்தீவ் தன்னிச்சையாக செய்திருக்க முடியாது – நூறு கொடுக்கக் கூடாது என்று கட்டளை போட்டவர் இலங்கை அணியின் கேப்டன் சங்கக்காராவாகதான் இருக்கும் என்றும் பேச்சு அடிபடுகிறது.

எப்படி இருந்தாலும் தோல்வியே, அதில் எதிரணி பேட்ஸ்மன் நூறு எடுப்பதால் என்ன குறைந்து போகிறது என்கிற ”ஸ்போர்டிவ் ஸ்பிரிட்” ஏன் இலங்கை வீரர்களுக்கு வரவில்லை என்று தெரியவில்லை.

இதை பற்றி யோசிக்கும் பொழுது எப்படி கிடைத்தாலும் டெஸ்ட் சென்சுரி, டெஸ்ட் சென்சுரிதான் என்று கடைசி நாள் செத்த மேட்சில் பேட்ஸ்மென்கள் கட்டாய ஓவர்கள் வீச விடாக்கண்டனாய் காவஸ்கர் அடித்த சில சதங்கள் நினைவுக்கு வருகின்றன. நூறை தொட்டவுடன் மேட்சை இனிமேல் இதில் ஒன்றுமில்லை என்று முடித்து விடுவார்கள்.

ஸ்போர்டிவாக கிரிக்கெட் விளையாடுவது என்பது இப்போது வழக்கொழிந்துவிட்டது என்பதற்கு இந்த சதம் மறுப்பு போர் – ஆட்டம் எடுத்துக்காட்டு. இவர்களெல்லாம் ஒரு முறை அம்பயர் தப்பாக அவுட் கொடுத்தாலும் குற்றம் குற்றமே என்று இந்திய கிரிக்கெட் ஜூபிலி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பாப் டெய்லரை திரும்ப அழைத்த குண்டப்பா விஸ்வநாத்திடமும் (அதற்கு பிறகு டெய்லர் போத்தமுடன் ஜோடி சேர்ந்து இந்தியாவை தோல்விக்கு தள்ளினார் என்பது பின் குறிப்பு); இதுதான் கடைசி பந்து, இதுதான் கடைசி விக்கெட், எடுத்து விட்டால் 1987 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி என்ற நிலையில், பந்து வீசும் முன்பே கோட்டை தாண்டி ஓடிய ரன்னரை பெயில்ஸை தட்டி அவுட்டாக்காமல் எச்சரிக்கை செய்து மன்னித்த மேற்கிந்திய ஜெண்டில்மேன் கார்ட்னி வால்ஷிடமும் கொஞ்ச நாள் கோச்சிங்குக்கு அனுப்ப வேண்டும்.

இந்த சென்சுரி மறுப்பு நிகழ்வு எனக்கு மிகவும் பிடித்த ஆங்கில எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சரின் Quiver Full of Arrows சிறுகதை தொகுப்பின் ஒரு கதையான ‘தி சென்சுரியை” நினைவு படுத்தியது. இரண்டு கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் வருடாந்திர மகா முக்கிய போட்டியில் கடைசி விக்கெட் எடுத்தால் வெற்றி, எதிரணி வெற்றிக்கு இன்னும் இரண்டு ரன்களே தேவையாக இருக்க, பேட்டிங் அணியின் முக்கிய பேட்ஸ்மென் 99ல் இருந்து கொண்டு வந்த பந்தை அடித்து விட்டு எங்கே போகிறது என்று பார்க்காமல் சென்சுரி முடிக்க ஓட, ஃபீல்டிங் செய்த பவுலிங் அணி கேப்டன் சுலபமாக ரன் அவுட் செய்ய வாய்ப்பிருந்தும் பந்தை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு பேட்ஸ்மனை சென்சுரி காண வைப்பார். இந்த சென்சுரிக்கு பிறகும் இன்னும் ஒரு வரி கதை இருக்கிறது. படிப்பவர்களின் ஆர்வத்தை கெடுக்க வேண்டாமே என்று இங்கு சொல்லப்போவதில்லை.

அடுத்த முறை சங்கக்காரா இந்தியன் ப்ரீமியர் லீக் விளையாட சென்னை வந்தால், “தி சென்சுரி” கதையின் ஒரு பிரதியை அவருக்கு கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.

Readers also liked

4 Comments »

  • Indli.com said:

    கிடைக்காத நூறு | DigitisingThoughts…

    நூறு என்பது கிரிக்கெட்டில் ஒரு முக்கிய லட்சியம். ஐம்பது கூட கிரிக்கெட்டில் அரை சதமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அரை சதத்துக்கும் சத்தம் போட்டு குதூகலிக்கும் ரசிகர்களே இதற்கு சாட்சி. எங்களுக்கெல்லாம் லார்ட்ஸைவிட அதிக நேசமாக நினைவில் இருக்கும் சேப்…

  • Sampath said:

    Dear Sathya
    Interestingly written. More than denial of a century, it was a silly stupid act and a very illogical rule, which interprets that the match is over the moment the umpire calls it a no ball, though even that delivery is not yet complete. Thus a run out of it will not be a run out. Ironically, the batsmen is ticked one for having faced a ball but no runs of the same ball. The bowler on record has bowled that extra ball, but none of that scored out of it. However, it is English rules and have stood the scrutiny of time.

    Chauhan was a dodgy, gutsy player liked by all of us. He made his debut in 1969 against the touring Kiwis, played in 1973 and then came back again in 1977 when India toured Australia under Bedi. Aussies were not full strength team, depleted by Kerry Packer. Still the matches were very interesting as the first two were won by Aussies, the next two by Indians and the last one by Aussie again. He did not play in the first match at Brisbane and in the second partnered Mohinder for 149 runs scoring a good 88. In that series, days after the match was over, DD would put a highlights capsule at odd hours – we used to plead with out neighbours and watched the game. That was the time when slow motion replays were shown by channel 9.

    Regards – Sampath

  • T.P.Anand said:

    கடைசி ரன் எடுக்கவிடாமல் அவரை வீழ்த்த பந்து வீசினால் பாராட்டலாம் ஆனால் இவரோ நோ பால் போட்டு தனக்கும் தன் நாட்டுக்கும் இழுக்கை தேடிக்கொண்டார்.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.