Home » Chennai, Headline, Tamil-தமிழ், அனுபவம்

சந்தோஷம் பிறந்த நாள்

3 June 2010 1,183 views 11 Comments

அது 1981-ஆம் வருடம். கூட்டல் இரண்டு முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்திருந்தேன். அப்போது கூட மதிப்பில்லாத 810 எண்களே கூ.இ.யில் பெற்றிருந்ததால், மிகவும் பிரயத்தனத்துக்கு பிறகு பி.காம். படிக்க மாலைக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்திருந்தது.

மாலை 6 முதல் 8.30 வரை கல்லூரி. புதிய பேண்ட், சட்டை போட்டுக் கொண்டு கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் பயம், கலக்கம், தயக்கம் இவற்றையும் சுமந்து கொண்டு, “ரேகிங் இருக்குமோ?” என்ற கேள்வியும் ”ஈவினிங் காலேஜ் ஆச்சே, வயசானவங்க, ஆபீஸ் போறவங்கதான் வருவாங்க, அவுங்க ரேகிங் செய்ய மாட்டாங்க” என்ற சமாதான பதிலும் மனதுக்குள்ளேயே கேட்டுக்கொண்டு மெதுவாக நடந்து இன்னும் பாரதி பெயர் வைக்கப்படாத பைக்கிராப்ட்ஸ் சாலையில் இருந்த 27பி பஸ் ஸ்டாப் வந்தேன்.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வந்த 27பி பஸ்ஸில் என்னுடன் ஒல்லியாக, ஒடிந்து விழுவான் போல இன்னொரு பையனும் (எங்கேயோ பார்த்திருக்கிறேனே?) ஏறினான். நான் கல்லூரி ஸ்டாப்பில் இறங்கியபோது அந்த ஒல்லி பையனும் இறங்கி எனக்கு முன்னால் விடு விடென்று நெடுக நீண்டு உள்ளே போன கல்லூரி சாலையில் எனக்கு முன்னால் வேகமாக நடந்து போனான்.

அடுத்த நாள் பஸ் ஸ்டாப்பில் போய் நின்றபோது அவனும் நின்று கொண்டிருந்தான். அவனுடன் இன்னும் இருவர் (கல்லூரி திறந்த அன்று மட்டம் போட்டிருப்பார்களோ?) நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் போல தோன்றியது, ஆனால் தயக்கம்.

அடுத்த நாளும் அதே கதை. அவர்களும் இன்னும் என்னை ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ள தயாராகவில்லை போல தோன்றியது. ஆனால் ஒரு இரண்டு அடி தள்ளி அவர்கள் நிற்கும் இடத்துக்கு கொஞ்சம் அருகில் சென்று அவர்கள் சிரித்து பேசுவதை கேட்டேன்.

நான்காவது நாள் எல்லோருமே ஏதோ தீர்மானித்துவிட்டு வந்ததுபோல் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டோம். “27பி போய்டுச்சா?”, “இல்லம்மா, இன்னும் வரல”. இப்போது அவர்களுக்கு மிக அருகில் சென்றுவிட்டேன். அதற்கு பிறகு ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டு, ஒல்லி பையன் இரண்டாம் வருடம் படிப்பவன், அவனுடன் பேசிக்கொண்டிருந்தவன் கல்லூரியில் படித்தாலும் படிக்காதவன் எல்லாம் தெரிந்து கொண்டு, தினமும் பஸ்ஸில் அருகருகே உட்கார்ந்து கொண்டு, ஒன்றாக காலேஜ் கட் செய்து அமைந்தக்கரை லட்சுமி, ஈகா, பழனியப்பாவில் ஈவினிங் ஷோ பார்த்துக் கொண்டு கல்லூரி கழித்தாலும், ஒல்லிப்பையன் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவனாக இருந்தான்.

கூடிய சீக்கிரமே அவன் காலேஜ் படிப்பது தவிர ஜாப் டைப்பிங்கும் செய்கிறான் என்று தெரிந்து கொண்டேன். அடுத்த சில நாட்களில் அவன் சி.ஏ. படிப்பதற்கு நுழைவு தேர்வுக்கும் படிக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். எனக்கும் சி.ஏ. ஆசை இருந்ததால், நுழைவு தேர்வு நுணுக்கங்கள், கோச்சிங் க்ளாஸ் விவரங்களை கேட்கப்போக ”அதெல்லாம் வேணாம், நான் ஒனக்கு சொல்லித்தரேன், நான் கோச்சிங் க்ளாஸ் போய் ஃபெயில் ஆகி சொந்தமா படிச்சு பாஸ் பண்ணியிருக்கேன்” என்றான்.

”லாஜிக்கும், மேத்ஸும் நான் சொல்லித்தரேன், இங்கிலீஷ், அக்கவுண்ட்ஸ், எகனாமிக்ஸ் நீ படிச்சுக்கலாம். லாஜிக் புக் எங்கிட்ட இருக்கு, மத்த புஸ்தகம் பாரகன்ல வாங்கிக்கோ” என்று மளமளவென்று புது சி.ஏ. புகுவிழா நடத்திவிட்டான்.

ஓரிரு நாட்களிலேயே அவன் வீட்டில் எனக்கு வகுப்பு துவங்கியது. அதிகமாக புத்தகத்தை பார்க்காமல், எனக்கு அவன் சொல்லிக்கொடுத்த லாஜிக்குக்கு நன்றி சொல்லாவிட்டால் நான் இன்று எக்சல்லில் எழுதும் நெஸ்டட் இஃப் தென் எல்ஸ் ஸ்டேட்மண்ட்கள் பலிக்காமல் போய் விடும்.

அவன் கொடுத்த ஊக்கத்தில் சி.ஏ. எண்ட்ரென்ஸ் எழுதி அவன் சொல்லிக்கொடுத்த பாடங்களில் நன்றாக மதிப்பெண்கள் வாங்கினாலும், பாழாய்போனா பொருளாதாரத்தால் மொத்த மதிப்பெண்கள் பாஸ் மதிப்புக்கு குறைவாக வந்து என் சி.ஏ. கனவை ஆறு மாதம் தள்ளிப்போட்டது; ஆனால் எங்கள் நட்பு இறுகிப்போனது.

அதற்கு பிறகு அவன் சி.ஏ.வுக்கு ட்ரெயினிங் எடுத்த அதே ஆடிட்டர் ஆபீசில் நானும் சேர்ந்ததும் இன்னும் நட்பு கூடி எங்கள் வீட்டில் நான் இருப்பதைவிட அவன் வீட்டில் அதிகம் இருப்பதாக ஆனது. அந்த நாட்களில் அவனிடம் இருந்தது ஒரு சைக்கிள் மட்டுமே. அதிலேயே என்னை பின்னால் ஏற்றி அந்த ஒல்லி உடம்பில் இத்தனை சக்தியா என்று ஆச்சரியப்படவைத்து ஆபீஸ் முதல் கடலை போட, சாப்பிட பீச் வரை கூட்டிப்போவான். அந்த சைக்கிளுடைய பின்னஞ்சீட்டு நான் உட்காராத போது காதல் தோல்வி போல் உணர்ந்திருக்கும் என்று தோன்றுகிறது.

அவன் வீட்டுக்கு போகும்போதெல்லாம் அவனுடைய சுத்தமும், எதையும் தேட வேண்டிய அவசியம் எப்போதுமே ஏற்படாமல் நேர்த்தியாக அவனுடைய புத்தகங்களையும், இதர பொருட்களையும் வைத்திருந்ததும் என்னை பிரமிக்க வைக்கும்.

இந்த நல்ல நட்பினூடே சண்டையும் வந்து கொஞ்ச காலம் பேசாமல் இருந்திருக்கிறோம். ஆனாலும், அந்த சமயங்களிலும், நான் அவன் வீட்டுக்கு செல்வதை, அங்கே படிப்பதை நிறுத்தவில்லை. அவனும் வராதே என்று சொன்னதில்லை.

நகைச்சுவையாக பேசுவதிலும், எந்த ஒரு விஷயத்தையும் மிக அழகாக விவ்ரிப்பதிலும் அவனுக்கு நிகர் அவனே.

நான் அவனுக்கு கொஞ்சம் பின்னால் சி.ஏ. சேர்ந்தாலும் இருவரும் ஒரே சமயத்திலேயே சி.ஏ. முடித்தோம். நான் சி.ஏ. முடித்ததில் அவனுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இறுதித் தேர்வின் போது ஒவ்வொரு தேர்வுக்கும் முன்னால் என்னை தேர்வுக்கு தயார் செய்தது அவன்தான். அதிகம் படிக்க நேரம் இல்லாத நிலையில் இருந்த எனக்கு, இரண்டு மூன்று வருடங்களின் கேள்வித்தாள்களை வைத்துக் கொண்டு மிக முக்கியமாக படித்துக் கொண்டு போகவேண்டியதை எடுத்துக்காட்டி என்னை தேர்வில் “எதிர்பாராத வெற்றி” பெற வைத்தவன் அவனே.

எனக்கும் அவனுக்கும் ஒரே வருடத்தில் (இரண்டு மாத வித்தியாசத்தில்) திருமணம் நடந்தது. எனக்கும் அவனுக்கும் ஒரே மாதத்தில் குழந்தைகள் (ஏழுநாள், ஒரு குழந்தை வித்தியாசத்தில்) பிறந்தன; அவனுக்கு இரட்டை!

எனக்கும் அவனுக்கும் இருக்கும் நட்புக்கு இப்போது இருபத்தைந்து வயதுக்கும் மேலாகிறது. அவனிடம் அப்போதும் இப்போதும் நான் வியப்பது உண்மையாகவே “உடுக்கை இழந்தவன் கை போலே இடுக்கண் களைய” நிற்கும் அவன் குணம்.

விருந்தோம்பலிலும் அவனுக்கு நிகர் அவனே.  நண்பர்களை உபசரிப்பதை பார்த்திருப்பீர்கள்.  நண்பனின் நண்பனை? நண்பனின் நண்பனின் நண்பனை? கேட்டாலும் உதவுபவர்கள் இல்லாத லோகத்தில் கேட்காமலே உதவும் தனிப்பிறவி அவன்.

அவன் வேறு யாருமில்லை; என்னுடைய உயிர் நண்பன் என்று நான் என்றும் பெருமையாக சொல்ல விரும்பும், என் இரண்டாவது மகனின் பெயரில் பாதியாக நான் வைத்திருக்கும், அலுவலகத்திலும், நண்பர் வட்டாரத்திலும் டி.பி. என்று அறியப்படும், இந்த வலையில் நான் எழுதாதபோது எழுதி, வராதவர்களையும் வலைக்கு இழுத்து வரும், எங்கள் நண்பி மாயாவால் ”சந்தோஷம்” என்று செல்லமாக அறியப்படும், என் நண்பன் டி.பி. ஆனந்த்.

இன்று பிறந்தநாள் கொண்டாடுவது கலைஞர் மட்டுமில்லை, இந்த வலைஞரும்தான்.

ஆனந்த்! உன்னுடன் பழகும் எல்லோர் மனதையும் மகிழ்விக்கும் உனக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Readers also liked

11 Comments »

  • Anu(win) Dreams said:

    ஆனந்த் அவர்களுக்கு,

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

    சத்யமூர்த்தி அவர்களே,

    அன்பான நட்பைப் பற்றிய
    அழகான பதிவு படைத்து
    வாழ்த்தி இருக்கீங்க..

  • அருணா சத்தியமூர்த்தி said:

    திரு. சந்தோஷம் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் நட்பை பற்றிய இந்த பதிவு “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது” என்ற பாடல் போல அழகாய் இருக்கிறது. என் கணவர் நட்பை உறவிற்கும் ஒரு படி மேல் நினைப்பதில் பெருமையாகவும் / பொறாமையாகவும் இருக்கிறது. வளர்க உங்கள் நட்பு.

  • Sarasija said:

    Wow! It was a touching write-up on a beautiful friendship and it was a delight to read about Anand Chitapa! Thanks for sharing the experience.

  • Vijayasarathy R said:

    ஆனந்த்,

    தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    இது போன்று நட்பும் நண்பர்களும் அவ்வளவு எளிதாக அடிக்கடி அமைவதில்லை என்பது என் எண்ணம்.

    இரு பக்கமும் விட்டுக் கொடுத்து போகும் குணமும், ஒருவரையொருவர் புரிந்துகொள்தலும் மிக முக்கியம். அப்படி இருவர் சேரும்போது கிடைப்பது, இது போன்று நன்றி பாராட்டும், நண்பனின் பிறந்தநாளில் இப்படியொரு நெகிழ்ச்சியான பதிவும்.

    பாராட்டுக்கள் சத்தியமூர்த்தி. எனக்கும் அவர் (ஆனந்த்) ஒர் நண்பர் என்று சொன்னால் படிப்பவர் பலர் நகைப்பர் பின்பு யோசித்து ஆனந்த் பற்றி நினைத்து வியப்பர்.

  • rockkozhi said:

    Badal Bhe Ho
    Chatta Bhe Ho
    Barish Na Ho
    To Kya Fayda?

    Dost Bhe Ho
    Wafadar Bhe Ho
    Dildar Na Ho
    To Kya Fayda?

    The most beautiful thing in the world is to see your friends smiling…
    and The next best thing is to know that YOU are the reason behind it…

    enro eppovo padithathu ninaivil…

    best wishes for your day…

  • Suresh G said:

    TP – belated though here’s wishing you a very happy birthday – God Bless many happy returns of the day. Say a hi to Sathya – it’s a lovely writing full of emotions. Keep it up Sathya.

    Suresh G

  • Kannan said:

    அன்புள்ள ஆனந்த், உனக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    என் நினைவலைகளை பிரட்டிப் பார்க்கிறேன். என்னுடைய முதல் வேலை அனுபவத்தின் முதலாளி அசோக்கின் வேலை தத்துவங்களை அறிய நான் உன் வீட்டிற்கு வரும்போது எல்லாம் நீயும் மூர்த்தியும் மொட்டைமாடியில் காற்றிலே கை விரல்களை அசைத்துக்கொண்டு, வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியலையும் சிலாகித்துக் கொண்டே என்னையும் சில முறை பார்த்தது, இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. அப்போது நான் இதெல்லாம் நமக்கு சம்மந்தமில்லாதது என்று நினைத்து பலமுறை ஒதுங்கியுள்ளேன். ஒரு வேளை நானும் உங்கள் உரையாடலில் கலந்து கொண்டிருந்தால் உங்களின் முற்போக்கான எண்ணங்களின் தாக்கம் எனக்கும் ஏற்பட்டு B.A. என்பது CA வாக மாறி, இன்று ஒரு அரபு கம்பெனியின் குளிர் சாதன அறையில் அமர்ந்து நிஃப்டியின் ஏற்ற இறக்கங்களை கவனித்திருப்பேன்.

  • Sundar said:

    Hi Anand…..many many happy returns of the day. Best part of the article is “இந்த நல்ல நட்பினூடே சண்டையும் வந்து கொஞ்ச காலம் பேசாமல் இருந்திருக்கிறோம். ஆனாலும், அந்த சமயங்களிலும், நான் அவன் வீட்டுக்கு செல்வதை, அங்கே படிப்பதை நிறுத்தவில்லை. அவனும் வராதே என்று சொன்னதில்லை”. Only husband & wife, parent & child live like this. GOD BLESS YOU & Your Family. Needless to comment on Murthy’s article, but still a few words….very serious matter written with natural wits.

  • Triplicane Vaasi said:

    Belated birthday greetings to Anand.

    May this birthday be just the beginning of a year filled with happy memories, wonderful moments and shining dreams.

    Wishing you many more good and prosperous years ahead!!!.

    ‘METICULOUS’ is the middle name for Anand!. How else one describe a person who buys, Taxmann’s “Income Tax Act’ and ‘Income Tax Rules’ books the very next day of passing his Intermediate exams and carry these along!!.

    This quality of his has other extremes also. He also used to mark dates in his wall calendar about some acts of his (should known only to him !!).

  • triplicani (author) said:

    @ Triplicane Vaasi,

    While I am privy to those marks in his calendar in those days, I stopped short of writing about them. As I didn’t find any “Logic” in writing about that. :)

    I know who you are!

    :)

  • T.P.Anand said:

    I am still wondering who this “triplicane vaasi” is??

    Can you please write to me separately to disclose your identity. My mail ID is tpanand63@hotmail.com

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.