Home » Chennai, Headline, Movies, Tamil-தமிழ், படித்ததும், பிடித்ததும்

புதிய பாதை போடும் சாதனை நாயகன்

7 November 2009 1,376 views 9 Comments
ஹாய்! Hi! you have been here atleast 3 times before; don't you think we have started liking each other? Stay updated when I update this site by subscribing to the site feed. Thanks! நன்றி

Enter your email address: Delivered by FeedBurner


கமலுக்கு இன்று பிறந்தநாள்.

அவர் என் குடும்ப உறுப்பினர் இல்லையாதலால் இன்று காலை காப்பி குடித்தபடி என்.டி.டி.வி. பார்க்கும் போது கீழே ஓடிய ஸ்க்ரோல் மெசேஜ் மூலமாகத்தான் இன்று ஐம்பத்தைந்து வயதை புரட்டுகிறார் என்று தெரிந்து் கொண்டேன்.  ஐம்பத்தைந்தா என்று நம்பமுடியாத இளமையில் ஜொலிக்கும் கமலுடைய பல்லாயிரம் கமல் ரசிகர்களில் நானும் ஒருவன்.

”அம்மாவும் நீயே , அப்பாவும் நீயே” என்று தமிழ் கடவுள் முருகனை நோக்கி பாடி தன் திரைப்பட வாழ்க்கையை துவங்கிய கமல் இன்று ”கடவுள் இல்லைன்னு சொல்லல, கடவுள் இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லறேன்” என்று சிந்தனையை தூண்டும் வசனங்களை எழுதும் தூரத்துக்கு வளர்ந்து விட்டார். அவர் திரைவாழ்க்கை ஐம்பதை தாண்டிவிட்டது என்று எல்லோருக்கும் தெரியும்.

எனக்கு நினைவு தெரிந்து, கமல் என்று தெரிந்து நான் அவரை பார்க்க ஆரம்பித்து ஒரு 35 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

திருவல்லிக்கேணி ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் அவர் படித்திருக்கிறார் என்பதால் என்னைப்போல அதே பள்ளியில் படித்தவர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும்  ”எங்க ஸ்கூல்லதான் படிச்சான்” என்ற ஒரு சின்ன மார்பு உயர்த்தல், இறுமாப்பு எப்போதும் உண்டு.

1975லிருந்து 1980 வரை கமல் என்றால் எங்கள் தெருவில் இருந்த இளம்பெண்கள் நினைவுக்கு வருகிறார்கள்.  அப்போது அவர்களுக்கு இப்போதைய சாக்லேட் பாய்களான மாதவன், ஹ்ருதிக் ரோஷன் போன்றவர் கமல்.  கமல் பாடல்கள், படங்கள் தொலைக்காட்சியிலும், பட ஸ்டில்கள் பத்திரிகைகளிலும் பார்க்கும் போது அவர்கள் ஒரு மிதப்பான காதல் பார்வையில் கண்சிமிட்டினால் கமல் காணாமல் போய்விடுவோரோ என்று பார்த்துக் கொண்டிருந்தது நினைவில் நிற்கிறது. திருமணம் என்றால் கமலுடன் மட்டுமே என்று சூட்டிய மாலையுடன் காத்திருந்த திருப்பாவைகள் எங்கள் தெரு முழுக்க இருந்தார்கள்.

அவர்கள் பார்க்கும் பத்திரிகை படங்களில் (பெரும்பாலும் தினத்தந்தி வெள்ளித்திரை அல்லது ஜெமினி சினிமா) கமல் பட்டை பெல்டும், கால் பாதம் தாண்டி தரையை தேய்க்கும் பெல் பாட்டம் பேண்டும், நாய் காலர் சட்டையும் அணிந்தபடி சீனாக்கார தொங்கு மீசையும், படிக்கட்டிங் தலையுமாக ஒரு கையில் ஸ்ரீதேவியும், இன்னொரு கையில் சிகரெட் அல்லது கோப்பையுடன் காதல் பார்வை பார்த்துக் கொண்டிருப்பார்.

“என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சி” என்று அவர் தன்னைப்பார்த்துதான் கேட்கிறார் என்று எண்ணிய மீனாட்சிகள் கண்டிப்பாக தமிழகம் முழுக்க அந்த நாட்களில் இருந்திருக்கிறார்கள்.  கமல் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டபோது மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள சில இளம் பெண்கள் முயன்றதாக தினத்தந்தியில் செய்தி படித்திருக்கிறேன்.

அந்த திருமணத்துக்கு முன்பு எங்கள் திருவல்லிக்கேணி என்.கே.டி. பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் கமலுக்கு காதல் கடிதம் எழுதினார் என்றும் அதை படித்து கமல் அந்த பெண்ணை கூப்பிட்டு அறிவுரை கொடுத்தார் என்றும் உண்மையா வதந்தியா என்று தெரியாத ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கமல் ஸ்டைல்தான் பெண்களை தம்பக்கம் திரும்ப வைக்கும் உத்தரவாதம்.

ரஜினிக்கு முன்பே வந்துவிட்டாலும், ரஜினி விடு விடுவென்று வேகமாக தன் தனி விரைப்பு ஸ்டைலால் பெரும்பகுதி இளைஞர்களை கவர்ந்து விட்டாலும், பெண்கள் ஓட்டு கமலுக்குதான் அப்போது.  எங்களுக்கு வகுப்புகள் இல்லாத போது  முடிவில்லாமல் தொடர்ந்த நடுவர் இல்லா பட்டிமன்றம் கமலா, ரஜினியா என்பதுதான்.

அபூர்வ ராகங்கள் படம் காண்பித்த தினத்தில் அவர் நடிப்பை பார்க்க நாங்கள் ஐம்பது பைசா டிக்கெட் வாங்கி தீவுத்திடலில் கூவம், மூத்திர வாசனைகளை பொருட்படுத்தாமல் திறந்த திரையரங்கில் புழுதியில் அமர்ந்து படம் பார்க்க சென்றிருக்கிறோம்.  அதேபோல் நிழல் நிஜமாகிறது, நினைத்தாலே இனிக்கும் (இசை, நடனம், நகைச்சுவை, இவற்றுக்கு மேலாக ரஜினி மற்றும் சுஜாதா).

கமல் பாடிய பாடல்கள் அவருடைய இன்னொரு பரிமாணம்.  இப்போதும் நான் கேட்க நினைக்கும் பாடல்கள் கமல் தன் இளமையான குரலில் பாடிய “ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்”, “பன்னீர் புஷ்பங்களே” ஆகியவை.

ஒரு காலத்தில் வருடத்துக்கும் நான்கு ஐந்து படங்கள் கூட நடித்துக்கொண்டிருந்த கமல், காதல் இளவரசனாகவே காலம் தள்ளுவதற்கு பதிலாக தன் பாதையை மாற்றி இலக்கை இலக்கங்களிலிருந்து மாற்றிக் கொண்டது நாயகன் படத்துக்கு பின்னரே.

அப்படி அவர் மாற்றிக்கொண்டது தமிழ் சினிமாவுக்கு நல்லகாலம் என்று சொல்லவேண்டும்.  தன் பாதையை மாற்றிக் கொண்டதால், புதிது புதிதாக ரசிகர்களுக்கு கொடுக்க அவருடைய தேடல் தொடங்கியது.  அந்த தேடலின் விளைவால் தமிழ் சினிமாவுக்கு புதிய கதை சொல்லும் உத்திகளும், புதிய தொழில் நுட்பங்களுக்கு அறிமுகமும் கிடைத்தன என்பது மறுக்க முடியாத உண்மை.

* DTS அறிமுகமானது கமலுடைய பாசவலை படத்துக்கு பின்னரே

* தமிழ் படங்களில் க்ராபிக்ஸ் உபயோகப் படுத்தப்பட்டது விக்ரம் படத்தில்

* லைவ் சவுண்ட் எனப்படும் டப்பிங் இல்லாமல் ஒலி உபயோகித்தது ஹேராம் படத்தில்

* ஒப்பனையில் புதிய உத்திகள் “இந்தியன்”, “அவ்வை சண்முகி”

* க்ராபிக்ஸில் புதிய உத்திகள், தொழில் நுட்பம் ஆளவந்தான்

* இசையில் வெளிநாட்டு சிம்பனி கலைஞர்களை உபயோகித்தது ஹேராம்

* எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம் ஒப்பனையை நாடாமல் புத்திசாலித்தனமான உத்திகளை மட்டுமே கையாண்டு நான்கு வேடங்களை போட்டுக்காட்டியது “மைக்கேல் மதன் காமராஜன்” (ஒரு காட்சியில் மதனும், ராஜுவும் பேசிக்கொண்டிருக்க அலமாரியின் கண்ணாடியிலும் இவர்களின் இரு உருவமும் தெரியும்)

* இன்று கூட பலரையும் எப்படி என்று யோசிக்கவைக்கும் “அபூர்வ சகோதரர்கள்” குள்ள கமல் வேடம்.  இதற்கான வெள்ளோட்டம் நடந்தது புன்னகை மன்னன் படத்தில் (சூப்பர் மார்க்கெட்டில் ஒரு குழந்தையின் அழுகை நிறுத்த சூட்கேசுகளிடையே உயரமான சாப்ளின் கமல் நடந்து குள்ளமாகிக்கொண்டே போவார்).

* எந்த ஹீரோவும் செய்யத்துணியாத கதாநாயகன் கடைசிவரை தோற்கும் மகாநதி

* விருமாண்டியில் இருவர் கோணத்தில் ஒரு கதை

* மும்பை எக்ஸ்ப்ரஸ் இந்தியாவின் முதல் முழு டிஜிடல் வீடியோ கேமிராவில் எடுக்கப்பட்ட படம்

* உன்னைப்போல் ஒருவன் – முழுப்படமும் மும்பை எக்ஸ்ப்ரஸில் உபயோகிக்கப்பட்டதைவிட தேர்ந்த ரெட் ஒன் டிஜிடல் கேமிரா – தொழில் நுட்பம் முதன் முதலில் இந்தியாவில் அறிமுகம் உ.போ.ஒ.வில்.

எனக்கு தெரிந்து, நான் கேள்விப்பட்டவரை தான் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே அதிக பட்சம் முதலீடு செய்யும் தமிழ் நடிகர்கள் கமல், பிரகாஷ் ராஜ், பார்த்திபன் ஆகியோர் மட்டுமே.

எல்லோரும் போகும் பாதையை தேர்ந்தெடுக்காமல் புதிய பாதையை போட நிறைய ஆர்வமும், தோல்வியைக் கண்டு துவளாத எக்கச்சக்கமான மன உறுதியும் வேண்டும்.  அது கமலிடம் நிறையவே இருக்கிறது.

கமல் இன்னும் சாதிக்க வேண்டியவை பல இருக்கின்றன.  அவருடைய பிறந்த நாளில் அவர் நம்பாத, நான் நம்பும் இறைவனிடம் அவருக்கு நீண்ட ஆயுளையும், மேலும் மேலும் வெற்றியையும் தர பிரார்த்திக்கிறேன்.

*********

பதிவு பி்டித்திருந்தால் இங்கே க்ளிக்கி தமிழிஸ் தளத்தில் பிரபலமாக்குங்கள்

Bookmark and Share

Readers also liked

9 Comments »

  • Vijayasarathy R said:

    //எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம் ஒப்பனையை நாடாமல் புத்திசாலித்தனமான உத்திகளை மட்டுமே கையாண்டு நான்கு வேடங்களை போட்டுக்காட்டியது “மைக்கேல் மதன் காமராஜன்” (ஒரு காட்சியில் மதனும், ராஜுவும் பேசிக்கொண்டிருக்க அலமாரியின் கண்ணாடியிலும் இவர்களின் இரு உருவமும் தெரியும்)// – இந்த படத்தை பலரும் இன்று மறந்துவிட்டோம். மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சர்யப்பட்ட படம். நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி.

    //திருமணம் என்றால் கமலுடன் மட்டுமே என்று சூட்டிய மாலையுடன் காத்திருந்த திருப்பாவைகள் எங்கள் தெரு முழுக்க இருந்தார்கள்.// – ஆண்டாள், கண்ணன், திருப்பாவை, கமல், ரசிகைகள், திருமணம். நல்ல உவமை.

    //கமல் பட்டை பெல்டும், கால் பாதம் தாண்டி தரையை தேய்க்கும் பெல் பாட்டம் பேண்டும், நாய் காலர் சட்டையும் அணிந்தபடி சீனாக்கார தொங்கு மீசையும், படிக்கட்டிங் தலையுமாக ஒரு கையில் ஸ்ரீதேவியும், இன்னொரு கையில் சிகரெட் அல்லது கோப்பையுடன் காதல் பார்வை பார்த்துக் கொண்டிருப்பார்// உருவத்தை நேரில் பார்த்த உணர்வு.

    கமலின் இந்த வளர்ச்சிக்கும், திரையுலகுக்கு அவரின் நன்றிபாராட்டுதலுக்கும் இந்த வாழ்த்துப்பதிவு அழகு சேர்த்திருக்கிறது.

    நானும் கூட கமலைப் பற்றி ஒன்று எழுதியிருக்கிறேன். அதிருஷ்டவசமாக இன்று அதை பிரசுரிக்கவில்லை.

    நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கி, கடவுள் அவரை ஆசிர்வதிக்க என் பிரார்த்தனைகள்.

  • கனககோபி said:

    கமல் என்ற கலைஞானி நீண்ட ஆயுளுடன் வாழட்டும்…

    அழகான பதிவு…
    அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள்…

  • triplicani (author) said:

    நன்றி கனககோபி. கமலை பற்றி இன்னும் ஒரு விரிவான பதிவு போடவேண்டும்.

  • Uma said:

    Hi,

    Thanks for the wonderful delight about Kamal….

    1975-80 la porandha gals kum kamal craze ennum irukku nu sollradhula koncham perumai….

    Ennoda mugathilla oru 1000 watts bulb velicham kandean edai padikkum podhu….

    Kamal Piranda naal – spl eppo padichaalum edhu spl daan….

    Micheal Madana Kama Rajan – Example – oooohhhhhhhh ippadi oru paarvai kamalukke irukkumaanu theriyallai – Ippo irukkumaa nu theriyallai… Naan paarthu Viyanda vishayam appodhu….

    Good treat for Kamal Fans… Great Going…..

  • Uma said:

    “ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்”- ANDHARANGAM Movie – I think This song is Kamal Hassan’s first venture as a playback singer, in Tamil…..

    Paarkka koncham Kan koosum but voice nijamagavea Honey daan…. Choclate boy Kamal kooda illai-la… adaan….

    One of the best voice nu naan feel panninaa song – indru inaya thalathil thedinean download seiyaa…

    Once Again Thanks

    Paneer Pushpangalea – All time favourite song… daily oru murai kettal sogam kooda sugam agum :-)

  • triplicani (author) said:

    உமா,

    நன்றி. “ஞாயிறு ஒளி மழையில்” எனக்கு மிகவும் பிடித்த பாடல். எப்போது கேட்டாலும் அதன் வரிகளும், இசையும், ’குழந்தை’ கமலின் குரலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். (இப்போது இளைஞன் என்றால், முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் அவர் குழந்தைதானே? பாடத்தெரிந்த, சூப்பர் சிங்கர் ஜூனியரில் கலந்து கொள்ளாத குழந்தை)

  • Uma said:

    idhu super sir (super singer junior Matter)

  • barani said:

    thanks kanagagopi kamalhasan its realy great vazhga pallandu ena nanum ungalodu…………………………

  • jeevendran said:

    friends,
    “ஞாயிறு ஒளி மழையில்” padal video link tharamudiyuma pls…
    my email- jeevendran@yahoo.com

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.