பங்கு சந்தை வீழ்ச்சியில் இருந்து மீழ்ச்சி – தொடருமா?
5300 இலக்கை தொட்ட நிஃப்டி, பதினேழாயிரத்தை முத்தமிட்ட மும்பய் பங்கு சந்தை குறியீட்டு எண், இது அக்டோபரில் நடந்தது.
அதற்கு பின், பல நிறுவனங்களின் முதல் அரையாண்டு நிதி அறிக்கைகள் வெளியாகின. இவற்றின் பல நிறுவனங்களின் அறிக்கைகளும் திருப்திகரமாக இல்லாத நிலையில், பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு சந்தையின் ஏற்றம் நிலைக்காது என்ற கவலையுடன், உலக பொருளாதார தேக்கம் இன்னும் முடிவடையவில்லையோ என்ற கவலையும் சேர்ந்து கொள்ள, ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான வராக்கடனுக்கான நிதி ஒதுக்குதலை (ப்ரொவிஷன்) அதிகப்படுத்தும்படி அறிவுறுத்த – பங்கு சந்தை குறியீட்டு எண் தொடர்ந்து இறங்குமுகமானது.
17,000 புள்ளியை தொட்ட மும்பய் பங்கு சந்தை குறியீட்டு எண் (சென்செக்ஸ்) தட தடவென தினமும் 100, 200 என்று குறைந்து நவம்பர் நாலாம் தேதி கிட்டத்தட்ட 400 புள்ளிகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் இறங்கு முகம்தான். இந்த இரண்டு வாரங்களில் அமெரிக்க பங்கு சந்தை திடீரென்று மிகப்பெரிய அளவில் உயர்ந்ததும், அதற்கு சீயர்ஸ் சொல்லுவதுபோல் மற்ற ஆசிய பங்கு சந்தைகளும் உயர்ந்ததும் நடந்தது. அந்த நாட்களில் இந்திய பங்கு சந்தையும் துவக்கத்தில் உயர்ந்தாலும் நாளின் இறுதியில் மீண்டும் வீழ்ச்சி பாதைக்கே சென்றது.
இதற்கு மேலே சொன்ன திருப்தியில்லாத நிதி அறிக்கைகள் முக்கிய காரணம். அதிலும், சென்செக்ஸின் பெரும்புள்ளிகளான ரிலையன்ஸ், டி எல் எஃப் போன்ற நிறுவனங்களின் ஏமாற்றம் தந்த அறிக்கைகள் மிக முக்கிய காரணிகள். அதற்கும் மேலாக, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் பங்குகள் வெற்றி நடை போட்டதால் பங்கு சந்தை ஏற்றத்துக்கு ஒரு கடிவாளம் வரும் என்ற பல நிபுணர்களும் கணித்து வந்தனர்.
காரணம்? 2008 ஜனவரியில் விழத் தொடங்கிய பங்கு சந்தைகள் வீழ்ச்சியை மார்ச் 8, 2009 வரை தொடர்ந்தன. பின் ஒரு மீட்சி துவங்கியது. அங்கிருந்து ஏறத்துவங்கிய சந்தைகள், மே மாத நடுவில் காங்கிரஸ் எதிர்பார்த்ததற்கும் மேலாக பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் இன்னும் புது உத்வேகம் பெற்று அதிக களிப்போடு ஏறியதுதான்.
இந்த ஏற்றம் மிகப்பலரும் எதிர்பார்க்காத ஏற்றம் என்பதுதான் உண்மை. அமெரிக்காவும், மற்ற ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார தத்தளிப்பில் இருந்து மீளவில்லை. ஆனால் நம் பங்கு சந்தை கவலை கொள்ளாமல் ஏறியது. ஜுலை மாதத்தில் தொடங்கிய பருவ மழை பொய்த்தது. பங்கு சந்தை அதை ஒரு தூசு தட்டுவது போல் தட்டிவிட்டு ஏறியது. அடிமட்டத்தில் விலைவாசி ஏறிக் கொண்டிருக்க, அத்தியாவசிய பொருள்களின் விலைகள் வானுக்கு பறந்து கொண்டிருக்க, அரசு வெளியிடும் விலைவாசி குறியீட்டு எண் அதை பிரதிபலிக்காமல் இருந்தது. பங்கு சந்தை அதை சட்டை செய்யாமல் உயர்ந்தது.
இப்படி அஸ்திவாரம் வலுவில்லாத நிலையில் பங்கு சந்தை உயர்ந்தால் அதிக நாள் தாக்குப்பிடிக்கமுடியாது என்பது பலமுறை நிரூபணமான ஒன்று. ஆக காரணமில்லாமல் உயர்ந்த பங்கு சந்தை காரணமில்லாமல் அல்லது திடீரென்று எல்லா காரணங்களையும் கண்டு பிடித்து விட்டது போல் வீழ்ச்சி அடைய துவங்கியது.
தீபாவளியிலிருந்தே பங்கு சந்தையின் நிபுணர்கள் இந்த வீழ்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். இப்படி வீழ்ந்து கொண்டிருந்த பங்கு சந்தைகள் ஒரு சடன் ப்ரேக் போட்டது போல் இன்று ஒரு யு டர்ன் அடித்து சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருக்கிறது, நிஃப்டி 147 புள்ளிகள்.
எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி இந்த மீழ்ச்சி தொடருமா? என்னை பொறுத்தவரை இது அதிக நாள் தொடராது என்று நம்புகிறேன். அதிக பட்சம் ஓரிரு நாட்கள் வரைதான் ஏறுமுகம் அதன் பின் சென்செக்ஸ் புள்ளிகள் மீண்டும் இறங்கும் என்று நினைக்கிறேன். எலியட் வேவ் என்கிற பங்கு ஆராய்ச்சி முறையில் சென்செக்ஸை கணிக்கும் என் நண்பர் திரு ராம்கி (www.wavetimes.com) 17200க்கு பின் விழும் என்றார். விழுந்திருக்கிறது. 15500 தொட்டு மீண்டும் 16500/ 16600 வரை சென்று மீண்டும் பெரிதாக விழுந்து 14000 அல்லது அதற்கு கீழ் செல்லும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்.
பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. எது எப்படி இருந்தாலும் உலக பொருளாதார நிலையில் தள்ளாட்டம் கொஞ்சம் குறைந்து ஒரு நிலைக்கு வந்து கொண்டிருப்பது கண்கூடாக தெரிகிறது. 2010 பங்கு சந்தைக்கு நல்ல ஏற்றத்தை தரும் என்று நினைக்கிறேன். ஆகவே, இப்போது புதிதாக முதலீடு செய்யாமல் டிசம்பர் 2009 முதல் செய்வது நல்லது என்று நினைக்கிறேன்.
அப்போதும், முன்னணி பங்குகளையும், இரண்டாம் நிலையில் முன்னணி வகிக்கும் பங்குகளையும் மட்டுமே தேர்ந்து முதலீடு செய்வது முதலீடு வளர உதவும் என்று நம்புகிறேன்.
இந்த பதிவு பிடித்திருந்தால் இங்கே க்ளிக்கி தமிழிஸ் தளத்தில் ஓட்டுப்போட்டு பிரபலமாக்குங்கள்









Leave your response!