கோலங்களுக்கு போடுங்க 49 ஓ
தமிழில் பல செயற்கை கோள் சேனல்கள். சன், ஜெயா, விஜய், ராஜ், கலைஞர், மக்கள், மெகா, வசந்த் என முதன்மை சேனல்களும் அவற்றின் சகோதர சேனல்களுமாக, பலப் பல சேனல்கள்.
பல சேனல்களுக்கும் staple diet மெகாசீரியல்களும், திரைப்பட உலகம் சார்ந்த நிகழ்ச்சிகள்தான்.
மெகாசீரியல்களை கிண்டல் செய்தாலும், அவை பலராலும், முக்கியமாக, பெண்களால், மிக அதிக அளவில் பார்க்கப்படுகின்றன என்பதும் உண்மை.
வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், குடும்பத்தை கவனிக்கிற வேலையை செய்யும் பெண்டிருக்கும், நெடுந்தொடர்கள் கொஞ்சம் பொழுதுபோக்கு தருகின்றன.
சீரியல்கள் பார்க்க மாட்டேன் என்பவர்களும், செய்திகள், விவாதங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாடல் காட்சிகள், ஆவணப்படங்கள் என வேறு எதையாவது தொலைக்காட்சியில் பார்ப்பார்கள்.
ஆக தொலைக்காட்சி என்பது எல்லோருடைய வாழ்விலும் ஒரு முக்கிய இடத்தை பிடித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
இதனால், தொலைக்காட்சி மூலம் சொல்லப்படும் கருத்துக்களும் மிக எளிதாக அதிக மக்களை சென்றடைவதோடல்லாமல் பெரும்பாலான சமயங்களில் நல்ல தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
இது தெரிந்துதான் பல அரசியல் கட்சிகள் தங்களுக்கான பிரத்யேக தொலைக்காட்சி சேனல்களை வைத்திருக்கின்றன அல்லது தொலைக்காட்சி மூலம் விளம்பரம் செய்கின்றன.
அரசியல் சார்ந்த தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் தாக்கத்துக்கு உதாரணங்களாக…
1. “அய்யோ கொல பண்றாங்கப்பா”
2. “பணத்துக்கு ஓட்டு” கிளப்பிய பாரளுமன்ற நம்பிக்கை ஓட்டெடுப்பு
3. சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் (மாறன்) சன் வழி பிரசாரங்கள்
4. நவம்பர் 2008 மும்பை தீவிரவாதத் தாக்குதல் நிகழ்ச்சிகள்
5. ஜெயா டிவி ஒளிபரப்பிய (அதிமுவுக்கு சாதகமாக எடிட் செய்யப்பட்ட) துக்ளக் 2009 ஆண்டுவிழா நிகழ்ச்சிகள்
…ஆகியவற்றை சொல்லலாம்.
இது மீண்டும் தேர்தல் நேரம். தமிழகத்தில் தொலைக்காட்சி வைத்திருக்கும் இரு பெரும் கூட்டணிகளும் தத்தம் பிரசாரத்திற்கு தொலைக்காட்சியை பயன்படுத்திவருகின்றன. இதில் சன் டிவி ஆச்சரியமாக நடுநிலை என்று கூறக்கூடிய நிலையை எடுத்து வருகிறது.
இவ்வளவு வீச்சு இருக்கும் தொலைக்காட்சியில், நெடுந்தொடர்களில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் பயனுள்ளது. ஆயினும் அதை செயல்படுத்தும் தொடர்கள் எனக்கு தெரிந்தவரை மிகக் குறைவு. நான் கிட்டத்தட்ட விடாமல் பார்க்கும் தொடர்களான எங்கே பிராமணன் மற்றும் கோலங்கள் தொடர்கள் இந்தவிதத்தில் பாராட்டப்படவேண்டியவை.
எங்கே பிராமணன் பார்ப்பவர்கள் கோலங்கள் பார்ப்பவர்களை விடவும் குறைவு என்று நினைக்கிறேன். அதிகம் பிரபலம் என்பதால், கோலங்களில் சொல்லப்படும் சமூக நோக்கு கொண்ட கருத்துக்கள் அதிகம் பேரை சென்றடையும். இதை இந்த தொடரின் இயக்குனரான திருச்செல்வம் அழகாக பயன்படுத்திக் கொள்கிறார்.
தானே ஏற்று நடிக்கும் தொல்காப்பியன் என்ற கதாபாத்திரத்தின் மூலமும், தோழர் என்ற கதாபாத்திரம் மூலமும் நல்ல சிந்தனைகளை அவர் சொல்லி வருகிறார். கடந்த வாரம் கோலங்களில் இது போன்ற இரண்டு சிறப்பான கருத்துக்கள் இடம் பெற்றன.
ஒன்று, வளர்குறை இருக்கும் “சிறப்பு குழந்தைகள்” காப்பகத்திற்கு கதாநாயகியை கூட்டிச் செல்வதன் மூலம் அப்படிப்பட்ட குழந்தைகளை பற்றிய விழிப்புணர்வை நமக்கு ஏற்படுத்தியது. இதுவரை இது தொடர்பாக வந்தக் காட்சிகளை பார்த்ததில் இந்த கருத்து கோலங்களில் இன்னும் விரிவுறும் என்று தோன்றுகிறது (ஹிந்தி நடிகர் அமீர்கானின் “தாரேன் சமீன் பர்” இதே கருத்தை அழகாக மக்களிடம் கொண்டு சென்றது)
அடுத்த கருத்து இணையத்திலும், முன் செலுத்தப்படும் மின்னஞ்சல்களிலும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் 49-ஓ என்கிற இந்திய தேர்தல் விதிப் பிரிவு. சமீபத்தில் ஞாநி குமுதம் வெகுஜன வார இதழில் தன் ”ஓ” பக்கத்தில் 49-ஓ போட்டார். கோலங்களில், தோழர் கதாபாத்திரம் மூலம் இப்போது திருச்செல்வம் ஓ போட்டிருக்கிறார். இது மிக மிக பாராட்டப்பட வேண்டியது. இதை அப்படியே ஒளிபரப்பியதற்காக, குறைகளை மறந்து சன் தொலைக்காட்சிக்கும் ஒரு 49 ஓ போடலாம்!
அதன் வீடியோ, என் அலைபேசியில் எடுத்தது உங்களுக்காக:









Leave your response!