Home » Chennai, Headline, Interesting, Tamil-தமிழ்

உண்மையே உன் விலை என்ன?

18 March 2009 693 views 8 Comments
ஹாய்! Hi! you have been here atleast 3 times before; don't you think we have started liking each other? Stay updated when I update this site by subscribing to the site feed. Thanks! நன்றி

Enter your email address: Delivered by FeedBurner


உண்மையே உன் விலை என்ன என்ற தலைப்பை பார்த்ததும், சோ-வின் வெற்றி பெற்ற நாடகம் நினைவுக்கு வரும். பின்னாளில் அது திரைப்படமாகவும் வந்தது. இந்த பதிவு அந்த நாடகத்தை பற்றி அல்ல.

அரிச்சந்திரன் உண்மையை மட்டுமே பேசியதால் அவன் கொடுத்த விலை மிக அதிகம். ஆனால் அப்படி உண்மையை மட்டுமே பேசியதற்கு அவருக்கு கிடைத்த விலை என்ன?

காலத்தை வென்ற புகழ்தான் அரிச்சந்திரனின் உண்மைக்கு கிடைத்த விலை அல்லது பரிசென்று கொள்ளலாம். இருப்பினும், தொடர்ந்து உண்மையையே பேசி வந்தவரை ஒரு பொய்யாவது சொல்ல வைக்கவேண்டுமென விசுவாமித்திரர் மெனக்கெட்டதில் அரிச்சந்திரன் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை.

திருவள்ளுவர் அரிச்சந்திரனின் கதையை படித்திருக்கவேண்டும். உண்மையை மட்டும் பேசியதால் அவருக்கு மட்டுமன்றி அவர் குடும்பத்துக்கும் வந்த இடர்களை பற்றி யோசித்திருப்பார். அதனால்தான், உண்மையை பற்றி எழுதும் போது, கொஞ்சம் பெரிய மனது வைத்து,

பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த
நன்மை பயக்கும் எனின்

என்று உண்மையில் கொஞ்சம் பொய்யை கலக்க அனுமதித்தார்.

திருவள்ளுவர், 1330 குறள் எழுதினார். இன்னும் பத்து நிமிடம் எடுத்துக் கொண்டு, மேற்கண்ட குறளுக்கு உண்மை:பொய் விகிதாசாரம் எத்தனை என்று இன்னும் ஒரு குறள் எழுதியிருக்கலாம்.

மனைவி கடைக்கு அனுப்பிவிட்டாளோ,  ”ராத்திரியெல்லாம் முழிச்சிண்டு ஏன் குறள் எழுதறேள்” என்று குரல் கொடுத்தாளோ,  எழுத்தாணி நிப் உடைந்துவிட்டதோ, தூக்கம் வந்துவிட்டதோ,  இதில் ஒன்று சேர்த்து இந்த அதிகாரத்தில் 11 குறள் ஆகிவிட்டால் மீதம் 132 அதிகாரத்துக்கும் ஒரு குறள் எழுதவேண்டுமே என்று நினைத்தாரோ, அல்லது வேறு என்ன காரணமோ – எழுதாமல் விட்டு விட்டார்.

அதனால், திருக்குறள் படித்து உரை எழுதும் நமது அரசியல் வாதிகள் இந்த பொய் விகிதாசாரத்தை அளவில்லாமல் அதிகரித்து பொய்மையாலேயும், அவர்கள் வாய் வன்மையாலேயும், வாய்மையை வென்று கொண்டிருக்கிறார்கள்.  அதிலும், “புரை தீர்த்த நன்மை” யாருக்கு மற்றும் எவ்வளவு என்றும் அய்யன் வள்ளுவர் ஒரு பாட்டம் சொல்லியிருக்கலாம்.  சொல்லாமல் விட்டதால், இப்போது பொய்மையும் வென்று கொண்டுக்கிறது, புரை தீர்த்த நன்மையும் அதிகாரத்தில் இருப்பவர்களின் குடும்பத்துக்கே ஏற்படுகிறது.

சுஜாதாகூட இதை வைத்துதான் “வாய்மையே (சில சமயம்) வெல்லும்” என்று கதை எழுதினார்.  ”பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது” என்பது பழமொழி.  உண்மை பேச ஊக்குவிக்க ஏற்பட்டது.  ஆனால், இப்போதோ பொய் எங்கும், எதிலும் பரவியிருக்கிறது.

இதைத்தான் சுஜாதா இன்னொரு கதையில், “எதற்கெடுத்தாலும் பொய் என்று ஆகி, இப்போது பொய் சொன்னால்தான் போஜனம் என்று ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உண்மை, பொய் இவற்றை பற்றி பேசுகையில், நடிகர் திலகத்தின் “உயர்ந்த மனிதன்” படத்தில் அவரும் சவுகார் ஜானகியும் நடித்த காட்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. சவுகார், சிவாஜியை பொய் சொல்லியதற்காக கடிந்து கொள்ள, சிவாஜி அதற்கு பதிலாக தங்களின் வாழ்க்கை எத்தனை பொய்களால் ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று பட்டியலிடுவார். (மிகப் பிரமாதமான காட்சி, டிவிடி கிடைத்தால் போட்டு பாருங்கள் – அல்லது சன்னை நம்புங்கள் – ஒரு நாள் ஏதாவது ஒரு வாரம் காட்டி வரம் காட்டுவார்கள்).

இதுதான் உண்மை. நாம் அனைவரும் கவலையின்றி பல விதங்களில் நமக்கு நன்மை பயக்குமெனின் பொய் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். பொய் மட்டும் முடியாதென்றால் வாழவே முடியாது என்பதுதான் இன்றைய உண்மை.

சில சாம்பிள்கள் பாருங்கள்.

1. அலுவலகத்திலிருந்து கிளம்ப தாமதமாகிவிடுகிறது, மனைவி அலைபேசியில் கூப்பிடுவாள், அவளிடம் ”வழியிலதான் இருக்கேன், தோ வந்துடுவேன்” என்று பொய்.

2. அலுவலகத்திற்கு தாமதமாக போய் சேருவோம், தாமதமாக வீட்டிலிருந்து கிளம்பியதால்; மேலதிகாரி கேட்டால், இருக்கவே இருக்கு ”ரொம்ப ட்ராஃபிக் ஜேம்” என்கிற பொய்.

3. யாரவது மின்னஞ்சல் செய்து வேண்டுமென்றே பதிலிடாமல், அவர் கூப்பிட்டு கேட்டால், “ஓ மெயில் வரலயே! மே பி ஸ்பேம் பாக்ஸ்க்கு போயிருக்கும்” என்று பொய்.

4. தலை நரைக்க தொடங்கிவிட்டால் போதும், நான் இன்னும் இளைஞனே என்று காட்டிக்கொள்ள, விளம்பரப் பொய்களில் இருந்து தேர்ந்தெடுத்து அடித்துக் கொள்ளும் தலைசாயப் பொய்.

5. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது கொடுக்காத நன்கொடைக்கு ரசீதும், தராத வாடகைக்கு கழிவு கேட்டும், எல்லா வரவுகளையும் முழுக்க காட்டாமலும் பொய்கள்.

6. வேலை நடக்கவேண்டுமென்றால் எவரிடம் வேண்டுமானாலும் அவர் இந்திரன், சந்திரன் என்று பொய்

7. இதுக்கு மேல, பொய்யை நியாயப்படுத்த ”ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த நடத்தலாம்” என்ற பொய்யோடு வாழ்க்கையை துவக்க வைக்க வழக்கு மொழிகள்.

8. தன் மகன்/ மகளின் அசல் மதிப்பெண்களை மறைத்து அதை அதிகரித்து சொல்லும் “பெருமையடி பொய்கள்”

9. பெண்கள் தங்கள் அழகை உயர்த்திக் காட்டப்போடும் “மேல் பூச்சு பொய்கள்”; அது தவிர இல்லா தங்கத்தை இருக்கும் என காட்டப்போடும் “தங்கமுலாம் பொய்கள்”

11. நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தால் வேண்டுமென்றே எடுக்காமல், பிறகு பார்க்கும்போது “சைலண்ட் மோட்ல இருந்தது” என்று பொய். (”அப்போ ஏன்யா “மிஸ்ட் கால்” பாக்கல?” அதுக்கும் ஒரு பொய் இருக்கு, ”பார்த்தேன் ஆனா ராத்திரி ரொம்ப லேட் ஆச்சு, நீ தூங்கிட்டிருப்பன்னு கால் ரிடர்ன் பண்ணல”)

12. நண்பனின் சாதனையையோ அல்லது சுபிட்சத்தையோ வயிற்றெரிச்சலை மறைத்து பொய்யாக பாராட்டாதவர்கள் குறைவு, அது ”வாழ்த்துப் பொய்”

13. மனைவியிடம் ”உன்னைத்தவிர நான் வேற யாரையும் மனசாலகூட நினைக்கல” என்பது போன்ற ராமச்சந்திர மூர்த்தி பொய்கள்.

எஸ்.வி.சேகரின் காதுல பூ நாடகத்தில் ஒரு காட்சி. மனைவி புது பட்டு புடவை கட்டிக் கொண்டு வந்து கணவனிடம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறாள்.

ம: ஏன்னா, இந்த புடவைல நான் எப்படியிருக்கேன்?
க: ரொம்ப அழகாயிருக்கே!
ம: போங்கோன்னா, பொய் சொல்லாதேள்
க: கண்டு பிடிச்சிட்டியேடி, கள்ளி

14. புலவர்களை பற்றி கேட்கவே வேண்டாம். இன்னொரு கவிஞரே ஒத்துக்கொண்டு “பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்று பாடி விட்டார். (ஆனால், கவிஞனின் பொய்கள் மனதுக்கு சுகம் தருவதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை. உண்மையில், கவிஞனின் பொய்தான், புரைதீர்த்த நன்மை பயக்கும் பொய் என்று தோன்றுகிறது). இதிலும் சில வடிகட்டிய பொய் மட்டுமே நிறைந்த வாழ்த்துப்பா பாடும் கவிஞர்கள் இப்போது அதிகம். அதுவும், பாட்டு அரசியல் தலைவருக்காக என்றால், கவிஞர்கள் தொடுவது எவரெஸ்ட் சிகரம்தான்.

ஆக நாமெல்லோருமே உண்மையிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டோம், கடைசியாக உண்மை மட்டும் பேசியவருக்கு “மகாத்மா” என்ற பட்டம் கொடுத்துவிட்டு. பின்னே, நாமெல்லாம் “சத்திய சோதனை” செய்ய முடியுமா?”

முழு பூசணிக்காய சோத்துல மறைச்சதெல்லாம் அந்தக்காலம், இப்போ பீஸாவுலயே மறைக்கக் கற்றுக்கொண்டுவிட்டோம்.

முக்கிய அறிவிப்பு

நீங்கள் தரும் பின்னூட்டம், என்னை போன்றவர்களுக்கு தரும் ஊட்டம்.  படித்துவிட்டு ஒரு நாலு வார்த்தை எழுதுங்க – கீழே அதற்காக பெட்டி போட்டு, முட்டி போட்டு காத்திருக்கிறேன்!

Bookmark and Share

Readers also liked

8 Comments »

  • chinnappaiyan said:

    ஆஹா. பதிவு சூப்பர்.. அருமை… கொன்னுட்டேள் போங்கோ…
    (இது 15த் பாயிண்ட் இல்லே!!!)

  • triplicani (author) said:

    சின்னப்பையன் மாதிரி பெரிய”வாள்” எல்லாம் வந்து பின் – ஊட்டம் கொடுத்தா நல்லது. இல்லன்னா, கொன்னுடுவேன் இன்னும்!
    :)

  • Vijayasarathy R said:

    ஓ பொய்யப்பத்தி ஒரு பதிவே போட்டுட்டீங்களா…

    அப்ப நானும்….பொய்யூட்டம் ஒண்ணு…இத படிக்கும் போது நடுவுல நாயே..பேயே…இதெல்லாம் போட்டுக்கலாம்.

    நல்ல அருமையான பதிவு.

    //இதைத்தான் சுஜாதா இன்னொரு கதையில், “எதற்கெடுத்தாலும் பொய் என்று ஆகி, இப்போது பொய் சொன்னால்தான் போஜனம் என்று ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.// நச்சென்ற கோட்(Quote).

    உண்மை பேசுபவருக்கு மகாத்மா என்று பட்டமளிப்பது அல்லது உண்மை பேசுபவரை ”பெரிய மகாத்மா” என்ற நக்கலடிப்பது இவை இரண்டிலுமே எனக்கு ஒப்புதல் கிடையாது. காந்தி உண்மையை மட்டுமே பேசினார் என்பது நாம் கேள்விப்பட்டது மற்றும் பரப்பிய ஒன்றே…

    காந்தியையும், மகாத்மாவையும், உண்மையையும் சேர்த்து பேசுவதே முற்றிலும் தவறு. மூன்றுக்கும் அர்த்தம் தெரியாதவர்கள் உருவாக்கிய (சேர்த்தெழுதிய) ஒன்று.

  • triplicani (author) said:

    விஜயசாரதி,

    காந்தி சிறுவயதுக்கு பிறகு பொய் பேசக்கூடாது என்பதை தன் இறுதிவரை கடைபிடித்தார் என்பது அவருடைய சத்தியசோதனையிலேயே இருக்கிறது. உண்மை பேசினால் மட்டுமே ஒருவர் மகாத்மா ஆகிவிட முடியாது என்பது என்னவோ உண்மைதான். இருப்பினும், உண்மை பேசுவதற்காக அரசாங்கம், “கலைமாமணி, பத்மஸ்ரீ” போல “மகாத்மா” தருவதாக வைத்துக்கொள்ளலாம் – எத்தனை பேர் தயார் ஆவார்கள்? அந்த பட்டம் தருவதில் உண்மை இருக்குமா?
    :)

  • Sunderindia said:

    நீங்க சொன்ன அத்தனையும் ரொம்ப பொய். பொய்யாத்தான் சொல்றேன். நாம் எப்பவுமே உண்மையே பேசுறோம், எப்பவாவது பொய் சொல்றோம், அதுவும் மத்தவஙக சந்தோஷத்துகாகத்தான். போஸ்ட் நல்லா காமெடியா இருக்கு. கொஞ்சம் உண்மை பேசினாக்கூட நம்ப மாட்டேங்குறாங்க.

  • sureஷ் said:

    //தொடர்ந்து உண்மையையே பேசி வந்தவரை ஒரு பொய்யாவது சொல்ல வைக்கவேண்டுமென விசுவாமித்திரர் மெனக்கெட்டதில்//

    இப்பவும் இப்படி தங்களுக்கு சம்மந்தம் இல்லாத வேலைகளைச் செய்து மற்றவர்களைத் துன்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

  • அர்ஷத், துபாய் said:

    அண்டப்புளுகு.. ஆகாசப்புளுகு… இதெல்லாம் கேள்விப்பட்டு இருக்கீங்களா?

    அதெல்லாம் நீங்க சொன்னா, நீங்கதான் பெரிய ஆள்.

    உண்மைய மட்டும் பேசுனா… ஹ்ம்ம்.
    என்னத்த சொல்ல..எப்படித்தான் இந்த புள்ள பொழைக்கப்போகுதோன்னு
    எல்லாரும் பரிதாப்படுவாங்க…

    உங்களுக்கு என்ன வேணும்? பெரிய ஆள்-னு புகழா? ஐயோ பாவம்-னு பரிதாபமா?

    நிம்மதி நிம்மதி ..உங்கள் சாய்ஸ்… உங்கள் சாய்ஸ்.

    ஹி..ஹி

  • triplicani (author) said:

    அர்ஷத்,

    வணக்கம். வாங்க வாங்க.

    நீங்க சொல்றது (ஒரு மாறுதலுக்கு) உண்மைதான். :)

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.